முன்னை அதிகாரம் அவத்தை பேதங்களில் கீழாலவத்தை -யையே கூறியதாக அமைந்தமையால், அதனையடுத்து மத்தியா லவத்தையைப் பதினாறுமந்திரங்களால் இவ்வதிகாரத்தில் கூறுகின்றார்.
`மத்தியாலவத்தை ஐந்தும் சாக்கிரத்தானமாகிய புருவ நடு விற்றானே நிகழ்தலின் அவற்றை உட்பிரிவாகிய சாக்கிர சாக்கிராம், சாக்கிர சொப்பனம் முதலியனவாக வைத்துக் கண்டு கொள்க` - என்றற்கு அவற்றை `மத்திய சாக்கிராவத்தை` - என்றார். இம் மத்தியா லவத்தையில் ஆன்மா உலகத்தை நன்கு பற்றி உணரும் ஆகலின், இந்நிலையில் அதற்கு அமைந்த கருவிகள் யாவும் செயற்பட வேண்டியுள்ளது. `அக்கருவிகள் தொண்ணூற்றாறு, என்பது பற்றிய ஆய்வு முன்னை யதிகாரத்துத் தொடக்க உரையில் காட்டப்பட்டது. ஆகவே, இவ்வதிகாரத்தில் நாயனார் தத்துவ தாத்துவிகங்களாகிய கருவிகளைப் பற்றியும் சிறிது விரித்துக் கூறுவார். மத்தியாலவத்தை ஐந்தும் விழிப்பிலேயே நினைப்பும், மறப்புமாய் மிக விரைவில் நிகழ்தலால் அவற்றை ஏனைய கீழாலவத்தை மேலலாவத்தைபோல எளிதில் உணர இயலாது. அவரவரும் தம் தம் நுண்ணுணர்வினாலே உணர்ந்து கொள்ளல்வேண்டும்.